
பொத்துவில் முகுது மஹாவிஹாரயில் அண்மையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பற்றிய PARL அறிக்கை
Published
பொத்துவில் முகுது மஹாவிஹாரயில் அண்மையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பற்றிய PARL அறிக்கை: காணி கொள்ளல் சட்டத்தின் தவறான பிரயோகமும் இராணுவமும்
அம்பாறை மாவட்டத்திலுள்ள பொத்துவில் முகுது மஹாவிஹார பிரதேசத்தில் குடிமக்களின் காணி நிர்வாகத்தில் இராணுவம் தலையீடு செய்து வருவது தொடர்பாகவும் இப்பிரதேசக் காணிகளை தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் எனக் கூறி அவற்றுக்கான வெளிப்படைத்தன்மை மிக்க செயல்விதிகளைப் பயன்படுத்தாமலும் தொல்லியல் முக்கியத்துவத்தினை நிரூபிப்பதற்கான அறிவியல் சான்றுகளைச் சமர்ப்பிக்காமலும் பாதிக்கப்பட்ட சமுதாயங்களுடன் கலந்தாலோசிப்பு நடத்தாமலும் கையகப்படுத்துவதற்கு எடுக்கப்பட்டுவருவதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாகவும் காணி உரிமைக்கான மக்களின் கூட்டமைப்பு (PARL) ஆழமான கரிசனை கொண்டுள்ளது. காணி தொடர்பாக எடுக்கப்படும் எவ்வித நடவடிக்கைகளும் அக்காணிகள் அப்பிரதேசத்தில் கொண்டுள்ள சிக்கல்வாய்ந்த வரலாற்றினைக் கருத்திற்கொள்ளவேண்டும். இப்பிரதேச மக்கள் தீர்க்கப்படாத பல குறைகளைக் கொண்டுள்ளனர். அவற்றிற்கு நுண்மைத்தன்மையுடனான அர்த்தபூர்வமான தீர்வுகள் தேவைப்படுகின்றன.
அண்மைக்கால மாற்றங்கள்
அண்மைய ஊடக அறிக்கை ஒன்றின் படி, நிலைமை பற்றிய அவதானிப்புக்களை மேற்கொள்வதற்காக பொத்துவில் மஹாவிஹாரவிற்கு மே மாதம் 14 ஆம் திகதி விஜயம் செய்யுமாறு உயர் மட்ட இராணுவ ஆளணியினருக்கு ஜனாதிபதி ராஜபக்ச அறிவுறுத்தியுள்ளமை தெரியவருகின்றது. தூதுக்குழுவில் பாதுகாப்புச் செயலாளரும் இராணுவம் மற்றும் கடற்படைத் தளபதிகளும் பதில் பொலிஸ் மாஅதிபரும் இடம்பெற்றிருந்தனர். “நாட்டில் அண்மைக் காலங்களில் பல தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களும் பரந்த அளவில் முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் அத்துமீறப்படுவது தொடர்பிலும் சேதமாக்கப்படுவது தொடர்பிலும்” பெரும்போக்கு ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் வெளியிடப்பட்ட செய்திகளுக்கான பதில் நடவடிக்கையாகவே இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டது எனக் கூறப்படுகின்றது. இவ்விஜயத்தினைத் தொடர்ந்து பாதுகாப்புச் செயலாளரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் குணரத்ன முகுது மஹாவிஹாரயிலும் அதனைச் சுற்றியும் பாதுகாப்பினைப் பேணுவதற்கு கடற்படைத் துணைப் பிரிவு ஒன்று ஸ்தாபிக்கப்படவேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். இராணுவத் தூதுக்குழு தீகவாபி பிரதேசத்திற்கும் நுரைச்சோலை வீடமைப்புத் திட்டத்திற்கும் விஜயம் செய்தது என இந்த ஊடக அறிக்கை குறிப்பிட்டிருந்தது.
1971 ஆம் ஆண்டில் பேராசிரியர் செனரத் பரனவிதான (தொல்பொருள் திணைக்களத்தின் அப்போதைய ஆணையாளர்) பொத்துவில் முகுது மஹாவிஹார பிரதேசத்தின் 72 ஏக்கரை தொல்லியல் இடமாகச் சுற்றுநிருபம் மூலம் பிரகடனப்படுத்த முயற்சித்தார் என மற்றொரு ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது. “தீவிரவாதக் குழுக்கள்” இப்பிரதேச்தினுள் “அத்துமீறி” “தொல்பொருள் முக்கியத்துவமிக்க பொருட்களுக்குச்” சேதமேற்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டுவருவது பற்றிய முறைப்பாடுகள் தொடர்பில் இந்த ஊடக அறிக்கை கவனத்தினை ஈர்த்திருந்தது. இப்பின்புலத்துடன் இப்பிரதேசத்தின் 61 ஏக்கர் காணி தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசமாக வர்த்தமானியில் அறிவிக்கப்படவேண்டும் எனக் காணி அமைச்சர் அண்மையில் அறிவுறுத்தியிருந்தமையினைச் செய்தி அறிக்கை இணைத்திருந்தது. பொத்துவில் முகுது மஹாவிஹாரயின் பிரதம மதகுரு சங்கைக்குரிய வரகாபொல இந்திரதிஸ்ச தேரர் 72 ஏக்கர்கள் “மீளக்கொள்ளப்படவேண்டும்” என வலியுறுத்தியதாகக் குறிப்பிடப்படுகின்றது.